நுவரலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் முன்பாக பல கோரிக்கைகளை முன்வைத்து வைத்தியர்கள், தாதிமார்கள், சிற்றூளியர்கள் பலரும் இணைந்து வைத்தியசாலையின் பிரதான நுழைவாயில் முன்பாக இன்று (04.03.2023) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கோரிக்கைகளாக அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உடனடியாக மக்களுக்கு கிடைக்க வழி செய்ய வேண்டும். முறையற்ற நியமனத்தை வழங்குவதை நிறுத்து, வாழ்வாதாரத்தினை அதிகரிக்கவும், வங்கியில் அதிகரித்த வட்டி வீதத்தினை குறைக்கவும், ஊழியர் பற்றாக்குறையை உடன் நிவர்த்தி செய், போன்ற பல்வேறு கோரிக்கைகளை வாசக பதாகைகளை ஏந்தியவாரும் அத்தோடு கோசங்களை எழுப்பியும் தங்கள் எதிர்ப்பினை வெளியிட்டனர்.
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றப்படாவிட்டால் சேவைகளை இடைநிறுத்தி பாரியளவில் முன்னெடுக்கப் போவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால் வைத்தியசாலைகளின் பணிகள் அனைத்தும் சுமார் ஒரு மணித்தியாலயம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதுடன் நோயாளர்களும் மிக சிரமத்திற்கும் உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.