( vavuniya tamil news-tamillk ) வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த கும்பல் ஒன்று அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் மேற்கொண்டதில் இளம் குடும்பபெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததுடன், மேலும் 09 பேர்காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் இன்றையதினம் அதிகாலை குறித்த வீட்டிற்குள் உள்நுளைந்த இனந்தெரியாத நபர்கள் வீட்டின் உரிமையாளர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.இதனையடுத்து காயமடைந்த அவர் வீட்டிற்குள் ஓடிச்சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்த குழுவினர், வீட்டிற்குள் சென்று அங்கிருந்த பெண்கள் உட்பட பலர் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன், வீட்டிற்கு தீவைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்..குறித்த தாக்குதல் சம்பவத்தில் வீட்டில் இருந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் எரிகாயங்களுக்கு உள்ளாகியநிலையில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
அவரது கணவர்,சிறுவர்கள் பெண்கள் உட்பட 9 பேர் காயம் அடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் வீட்டின் முன்பாக இனம் தெரியாத நபர்கள் நடமாடித்திரிவதை வீட்டின் உரிமையாளர் அவதானித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த பெண்ணின் கணவரைத்தேடியே ரவுடிக் குழுவினர் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை அங்கு வசிக்கும் சிறுமி ஒருவருக்கு இன்று அதிகாலை பிறந்த நாள் நிகழ்வொன்றும் சிறியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையிலேயே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.



