தூத்துக்குடி விவேகானந்தர் காலனி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பைபர் படகு மூலம் கடத்த முயன்ற 40 லட்சம் ரூபா பெறுமதியான சுமார் 1200 கிலோ எடை கொண்ட பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி கடற்பகுதி வழியாக நாள்தோறும் இலங்கைக்கு பீடி இலைகள், மஞ்சள், மாத்திரைகள், அழகு சாதனப் பொருட்கள், போதை பொருட்கள் ஆகியவை படகு மூலம் கடத்தப்படும் சம்பவம் நடைபெற்று வருகிறது.
இதைத் தடுக்கும் வகையில் பொலிஸார் மாவட்டம் முழுவதும் கடற்பகுதிகளில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே உள்ள விவேகானந்தர் காலனி கடற்கரைப் பகுதி வழியாக பீடி இலைகள் கடத்தப்படுவதாக க்யூ பிரிவு காவல் ஆய்வாளருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த பீடி இலைகள் மீட்கப்பட்டன.
அத்துடன் கடத்தலுக்கு பயன்படுத்தியிருந்த பதிவு எண் இல்லாத நவீன பைபர் படகு இருசக்கர வாகனம் ஆகியவற்றை க்யூ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
மேலும் தப்பிச்சென்ற கடத்தல் கும்பலைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொலிஸார், பறிமுதல் செய்யப்பட்ட பீடிஇலைகளை சுங்கஇலாக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.