சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராயும் இஸ்ரோவின் ஆதித்யா-எல்1 விண்கலத்தின் வெற்றிக்கு பிரதமர் மோடி முதல் பிற அரசியல் தலைவர்கள் வரை பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்கான ஆதித்யா-எல்1 விண்கலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் இன்று காலை 11.50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
தொடர்ந்து இந்த நிகழ்வை இஸ்ரோ விஞ்ஞானிகள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். அதன்பின்னர் விண்கலன் 125 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடையும். பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள ‘லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்’ எனும் பகுதியில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட உள்ளது.
அங்கு இருந்தபடி சூரியனின் வெளிப்புறப் பகுதியின் வெப்பச் சூழல், கதிர்வீச்சு, காந்தப்புலம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த ஆய்வுகளை ஆதித்யா மேற்கொள்ளும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு இந்திய தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



