Trincomalee News - கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக ஒரு இலட்சம் கையெழுத்து போராட்டத்தை கிழக்கின் பௌத்த பிக்குகள் ஆரம்பித்துள்ளனர்.
திருகோணமலை - நிலாவெளி பகுதியிலுள்ள பெரியகுளம் பொரலுகந்த ரஜமகா விகாரையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிப்பதை தவிர்க்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அண்மையில் உத்தரவொன்றை பிறப்பித்திருந்தார்.
இது தொடர்பில் பொரலுகந்த ரஜமகா விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சீலவங்கதிஸ்ஸ தேரருக்கு, பிரதேச செயலாளர் ஊடாக செந்தில் தொண்டமான் அறிவித்திருந்தார்.
இதன் காரணமாக கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஏ – 6 பிரதான வீதியை வழிமறித்து பௌத்த பிக்குகளும் பெரும்பான்மையின மக்களும் பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக இன்றையதினம் ஒரு இலட்சம் கையெழுத்து போராட்டத்தை பௌத்த பிக்குகள் ஆரம்பித்துள்ளனர்.
திருகோணமலை மாவட்ட மக்கள், சிவில் அமைப்புகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் ஆகியோரின் கோரிக்கைக்கு அமையவே, செந்தில் தொண்டைமானால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
எனினும், குறித்த பகுதியானது 99.9 வீதம் தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட பகுதி என ஆளுநர் செந்தில் தொண்டமானினால் நடத்தப்பட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.