![]() |
வடக்கு கிழக்கில் 19ஆம் திகதி வரை கனமழை தொடரும் |
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் கிடைத்து வரும் மழையானது தொடர்ந்து எதிர்வரும் 19ஆம் திகதி வரையும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன என யாழ்ப்பாண பிராந்திய வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி த.பிரதீபன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தொடர்ச்சியாகவும் மழை நீடிப்பதற்கான வாய்ப்புகள்
இலங்கைக்கு கீழாக காணப்படுகின்ற காற்றடுக்கு சுழற்சி காரணமாக தற்பொழுது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக கனமழை கிடைத்து வருகிறது.
இந்த மழையை பொறுத்தவரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கின்றமையை அவதானிக்க கூடியதாக உள்ளது.
ஏற்கனவே இலங்கையினுடைய வடக்கு மாகாணத்தினுடைய தரை மேல் நீர் பரப்புக்கள் அவற்றினுடைய உவர் நீரை வெளியேற்றுகின்ற இந்த சூழ்நிலையில் தொடர்ந்து கிடைத்து வருகின்ற கனமழை காரணமாகவும் பல்வேறு பகுதிகளில் உள்ள தாழ் நிலங்களில் வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புகள் இருப்பதாக அறியப்படுகிறது.
எனவே தொடர்ச்சியாக மழை கிடைக்கும் என்பதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருப்பது அவசியமானதாகும்.
மீண்டும் ஒரு காற்று சுழற்சி இலங்கையினுடைய தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் தோன்றுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதால் தொடர்ச்சியாகவும் மழை நீடிப்பதற்கான வாய்ப்புகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படுகின்றது.
அவதானமாக இருப்பது அவசியம்
தொடர்ச்சியான மழை கிடைக்கும் என்பதனால் இந்த தாழ்நில பகுதிகளில் இருக்கும் மக்கள் மழைவீழ்ச்சி தொடர்பான அளவு தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியமானதாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.