(vavuniya tamil news) வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் விடுவிக்கக கோரியும், பொலிஸாரின் அராஜகத்தை கண்டித்தும் வவுனியாவில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இன்று (16) முன்னெடுக்கப்பட்டது.
வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டர்களின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட வாகனப் பேரணியானது வவுனியா பழைய பேருந்து நிலையத்தை வந்தடைந்ததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டப் பேரணி ஆரம்பமானது.
கைது செய்யப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப் பேரணியானது வவுனியா, பழைய பேரூந்து நிலையத்தில் ஆரம்பித்து அங்கிருந்து மணிக்கூட்டு கோபுர சந்தியை அடைந்து, பசார் வீதியூடாக சென்று ஹொரவப்பொத்தானை வீதியை அடைந்து அங்கு வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் அமைந்துள்ள தொல்பொருள் திணைக்களத்தை முற்றுகையிட்டு கோசம் எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரார்கள், பின்னர் கண்டி வீதி ஊடாக சென்று வவுனியா சிறைச்சாலை முன்றலில் தமது போராட்டத்தை கைவிட்டனர்.
ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டவர்கள் ' பொலிஸ் அராஜகம் ஒழிக, வெடுக்குநாறி எங்கள் சொத்து, கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய், வழிபாட்டு உரிமையை தடுக்காதே, சிவ வழிபாட்டை தடை செய்யாதே, வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம், இராணுவமே வெளியேறு, பொய் வழக்கு போடாதே, பௌத்தமயமாக்கலை உடனே நிறுத்து'' என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர்.
விடுதலைக்காக நாம் தெர்ர்ந்தும் போராடுவோம்
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், சிவராத்திரி வழிபாட்டை குழப்பி பொலிசார் அராஜகத்தை கட்டவிழ்த்து கைது செய்யப்பட்டு பொய் குற்றச்சாட்டின் கீழ் சிறையில் இருக்கும் பூசகர் உள்ளிட்ட 8 பேரும் விடுவிக்கப்பட வேண்டும். அவர்களின் விடுதலைக்காக நாம் தெர்ர்ந்தும் போராடுவோம் எனத் தெரிவித்தனர்.
இக் கண்டன ஆர்ப்பாட்டப் பேரணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள், சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தின் மதகுரு அருட்தந்தை ரமேஸ், கிறிஸ்தவ மதகுருமார், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |