வெடுக்குநாறிமலை விவகாரம்; பூசகர் உள்ளிட்ட 8 பேர் விளக்கமறியலில்..! vavuniya news

 

vavuniya news

(vavuniya tamil news) வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


கடந்த 8 ஆம் திகதி மகா சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஆலயத்துக்குள் நுழைந்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் வழிபாட்டில் ஈடுபட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்தனர்.


அவர்களைக் கடந்த 9 ஆம் திகதி சனிக்கிழமை வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில் விசாரணைகள் நிறைவு பெறாத காரணத்தால் இன்று வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.


இந்நிலையில், இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


காலை 9 மணி முதல் மூன்று தடவைகள் குறித்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், தொல்பொருள் திணைக்களத்தினர் அங்குள்ள தொல்பொருள் சின்னங்களைச் சந்தேகநபர்கள் சேதப்படுத்தினர் என்று மன்றின் கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தனர்.


இதனையடுத்து மேற்படி சந்தேகநபர்கள் 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


ஆலயப் பூசகர் உள்ளிட்ட 8 பேர் சார்பில் ஜனாபதிதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகளான என்.ஸ்ரீகாந்தா, க.சுகாஷ், தி.திருஅருள், கிறிஸ்ரினா, ஜிதர்சன், சஜித்தா, சாருகேசி, விதுசினி, கீர்த்தனன், யூஜின் ஆனந்தராஜா, கொன்சியஸ் உள்ளிட்ட பலர் மன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மற்றும் நல்லூர் சிவகுரு ஆதீன கர்த்தா தவத்திரு வேலன் சுவாமிகள் ஆகியோரும் நீதிமன்றுக்கு சென்றமை  குறிப்பிடத்தக்கது.




செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்