வவுனியா(Vavuniya) பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் இன்றையதினம்(27) கவனயீர்ப்பு பேரணியை முன்னெடுத்தனர்.
இலங்கை பூராகவும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் 57 வது நாளாகவும் தமது பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதோடு சத்தியாக்கிரக போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
சம்பள உயர்வை உடனடியாக தர வேண்டும்
இந்நிலையில் நேற்றைய தினம்(26) கொழும்பில் பாடசாலை ஆசிரியர், அதிபர்களது போராட்டத் தளத்தில் அவர்கள் மீது தண்ணீர் தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதை கண்டித்தும், தமது நியாயமான கோரிக்கையாக காணப்படுகின்ற சம்பள உயர்வை உடனடியாக தர வேண்டும் எனக் கூறியும் இவ் ஊர்வலத்தினை ஏற்பாடு செய்திருந்தனர்.
வவுனியா பூங்கா வீதியில் உள்ள வவுனியா பல்கலைக்கழக வெளிவாரி கற்கைகள்பீட கட்டிட தொகுதியிலிருந்து ஆரம்பித்த கவனயீர்ப்பு பேரணி, வவுனியா நகர் வழியாக பழைய பேருந்து நிலையத்தை சென்றடைந்து நிறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.