Srilanka News Tamil
யாழில் வீடொன்றுக்குள் சென்று அநாகரீகமாக செயற்பட்ட யூடியுப்பர் உள்ளிட்ட நால்வரையும் விளக்கமறியல் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழில் உள்ள யூடியுப்பர் ஒருவர் ஏழை மக்களுக்கு உதவி செய்கின்ற காணொளிகளை பதிவேற்றம் செய்யும் வகையிலான யூடியுப் தளம் ஒன்றினை நடாத்தி வருகின்ற நிலையில் அவர் வீடொன்றில் பெண் பிள்ளைகளை அவமானப்படுத்துவது போன்று பேசிய காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இவ்வாறான பின்னணியில் அவர் உட்பட நால்வர் நேற்றையதினம் அந்த வீட்டுக்கு மீண்டும் சென்றவேளை ஊர் இளைஞர்கள் அவர்களை மடக்கி பிடித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் அவர்களுக்கு எதிராக பொலிஸாரால் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.