மாவீரர்களின் துயிலும் இல்லங்களை தமது கட்சியின் ஆதிக்கத்தை பயன்படுத்தி தமிழரசுக் கட்சியினர் நிர்வாகம் செய்வதாக மாவீரர் குடும்ப நல காப்பகத் தலைவர் தீபன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு முன்பாக இன்றையதினம்(09.10.2025) தேவி புர மாவீரர் துயிலுமில்லத்தினை தாவரவியல் பூங்காவாக அடையாளப்படுத்துவதற்கு எதிராக ஒர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்தது.
புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் கரிகாலன் குறித்த தீர்மானத்தை மாற்றுவதாக கூறியதைத் தொடர்ந்து திட்டமிட்ட ஆர்ப்பாட்டம் நிறுத்தப்பட்டது.
இதன்போது, மாவீரர் குடும்ப நல காப்பகத் தலைவர் தீபன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,
“மாவீரர்களின் துயிலும் இல்லங்களை தமது கட்சியின் ஆதிக்கத்தை பயன்படுத்தி தமிழரசுக் கட்சியினர் நிர்வாகத்தினை தெரிவு செய்து வருகின்றனர். அந்த நிர்வாகத்தில் தமது கட்சியின் முக்கியஸ்தர்களை நியமிக்கின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இந்த தேவிபுர துயிலும் இல்லத்தினையும் தாவரவியல் பூங்கா எனும் கட்டமைப்புக்குக் கொண்டு வர எண்ணுகின்றனர்.
அதற்கு ஒருபோதும் நாங்கள் உடன்பட போவதில்லை. இதேபோல, போலியான செயற்பாடுகளை இனிமேல் முன்னெடுத்ததால் நாங்கள் வீதிக்கு இறங்கி தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.