திருகோணமலை கடற்கரை பகுதியில், சட்டவிரோதமான முறையில் பெளத்த வணக்கஸ்தலம் ஒன்றை அமைத்து புத்தர் சிலை ஒன்றை நிறுவ முற்பட்ட நிலையில், பாரிய போராட்டத்தின் பின்னர் குறித்த சிலை நேற்று இரவு அகற்றப்பட்டுள்ளது.
திருகோணமலை மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் ஏற்கனவே உள்ள அரசமரத்துடன் இணைந்த புத்தர் சிலை கட்டுமானத்தை அண்மித்து புதிய வணக்கஸ்தல கட்டுமான பணிகள் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென ஆரம்பிக்கப்பட்டன.
நேற்று காலை இது தொடர்பில் அறிந்த கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்ட நிலையில் அங்கு பிக்குகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டன.
பின்னர் இந்த விடயம் தொடர்பாக திருகோணமலை துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் திணைக்கள அதிகாரிகள் முறைப்பாடு செய்ததன் அடிப்படையில் கட்டுமானப் பணிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு பொலிசார் பணித்தனர்.
ஆனால் அதனை பொருட்படுத்தாது நேற்று இரவு புத்தர் சிலை வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அவ்விடத்துக்கு வந்த பொலிசார் சிலை வைக்கும் செயற்பாட்டை தடுத்த போது பிக்குகளுக்கும்பொலிசாருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது
அதில் பிக்கு ஒருவர் பொலிசாரின் கன்னத்தில் அறைந்ததை தொடர்ந்து கைகலப்பானது, பொலிசார் புத்தர் சிலையை அகற்றியதுடன் பதட்ட நிலமை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
இதேவேளை, இந்தக் கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சட்ட அனுமதி அற்ற சிற்றூண்டிச்சாலையைக் கடந்த 4 ஆம் திகதி கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகள் அகற்றச் சென்ற போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்தப் பகுதி பெளத்த பிக்குவால் கால அவகாசம் கோரப்பட்டிருந்தது. அந்த 7 நாள் கால அவகாசம் நேற்று முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



