வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வருகின்ற கனமழை மேலும் 3 நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
அவரால் இன்று வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையில்,
இன்று பிற்பகலும் மாலையும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தற்பொழுது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வருகின்ற கன மழை மேலும் 3 நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது
அதாவது எதிர்வரும் 19ஆம் தேதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக மழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
கடந்த இரண்டு நாட்களில்( இன்று மதியம் 1.00 மணி வரை) மட்டக்களப்பு நகரை அமைத்த பிரதேசங்களில் தொடர்ச்சியாக 250 மில்லி மீற்றருக்கு மேற்பட்ட மழை கிடைத்துள்ளது.
இன்று மாலையும் மட்டக்களப்பு, அம்பாறை , திருகோணமலை மாவட்டங்களில் மிகக் கன மழை பெறவுள்ளன.
யாழ்ப்பாணத்தில் இன்று பிற்பகல் ஒரு மணி வரையான காலப் பகுதியில் பல பகுதிகளுக்கும் சராசரியாக கடந்த 36 மணியளங்களில் 125 மில்லி மீட்டருக்கு மேற்பட்ட மழை வீழ்ச்சி கிடைத்துள்ளது.
இந்த நிலைமை இன்னமும் மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என்பதனால் நிலம் நிரம்பு நிலையடைந்த பல பிரதேசங்களில் தொடர்ச்சியாக கிடைக்கும் கனமழை வெள்ள அனர்த்தத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய தாழ்நிலப் பகுதிகள், குறிப்பாக யாழ் நகரை அண்மித்த பகுதிகள், மட்டக்களப்பு மாவட்டத்தின் நகர பிரதேசங்களை அண்மித்த பகுதிகளில் உள்ள மக்கள் தொடர்ச்சியாக மழை கிடைக்கும் என்பதனால் அவதானமாக இருப்பது அவசியமானதாகும்.
எதிர்வரும் 23ஆம் திகதியிலிருந்து 28ஆம் தேதி வரையும் வங்காள விரிகுடாவில் புயல் ஒன்று உருவாகுவதற்கான வாய்ப்பு காணப்படுவதால் அக்கால பகுதிகளிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மிகக் கன மழையைப் பெறும்.
கடந்த பல ஆண்டுகளாக வடகீழ்ப் பருவக்காற்று காலப்பகுதியில் அதிகளவான மழையை பெற்றிருந்த முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் மாவட்டங்கள் குறைவான மழையை பெற்றிருக்கின்றன.
வடகீழ்ப் பருவக்காற்று இன்னமும் உச்சம் பெறவில்லை. பருவ மழைக்கான காலம் இன்னமும் போதுமானதாக உள்ளது. எதிர்பார்க்கும் மழை கிடைக்கும் என நம்புவோம் என தெரிவித்துள்ளார்.




