ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் இரண்டு பெண்கள் உட்பட நால்வர் கல்பிட்டி பகுதியில் இன்று காலை மூன்று கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் தமிழ்நாட்டை வசிப்பிடமாகக் கொண்ட இந்தியரும் அடங்குவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் லங்காதீபவிடம் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இந்தியர் அந்த நாட்டில் இருந்து இலங்கைக்கு ஐஸ் போதைப்பொருளை கொண்டு வந்தவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இலங்கைக்கு போதைப்பொருள் கொண்டு வரும் முக்கிய முகவர்களில் இந்திய பிரஜை ஒருவர் என பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் விஷேட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கல்பிட்டி பஸ் நிலையத்தில் போதைப்பொருள் அடங்கிய மூன்று பொதிகளுடன் சந்தேகநபர் ஒருவர் முதலில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட நபர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் இவரிடம் ஐஸ் போதைப்பொருள் வாங்க வந்ததாக கூறப்படும் மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் கல்பிட்டி, எத்தல பிரதேசத்தில் வேனில் சென்ற போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
வடமேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் அவர்களின் பூரண மேற்பார்வையின் கீழ், புத்தளம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திரு.நாலக டி சில்வா அவர்களின் பணிப்புரையின் கீழ், புத்தளம் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு. ரூபசிங்க, கல்பிட்டி பொலிஸ் அதிகாரிகள் குழு சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.