ரஷ்யாவின் பெலுகா மலைப்பகுதியில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
விபத்து
இந்த விபத்துக்கு உள்ளான Mi-8 ஹெலிகொப்டரானது 13 பயணிகளுடன் பெலுகா மலைப்பகுதியில் சுற்றுலா சென்றுள்ளது.
தியுங்கூர் எனும் கிராமத்தில் தரையிறங்கும் போது இந்த Mi-8 ஹெலிகொப்டரானது மின் கம்பியில் உரசியதாகவும், இதனால், தீ பற்றியதாகவும் விபத்து ஏற்படும் தருவாயில் நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த மருத்துவ உதவிக்குழுவினர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள், தீயை அணைக்க மிகக் கடுமையாக போராடினர்.
குறித்த விபத்தின் போது ஆரம்பத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆறு பேர் என்று கருதப்பட்டது, ஆனால் அதன் பின்னர் மேலும் நான்கு இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம்
எனினும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது. இதனிடையே, சிலர் காயங்களுடன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர்களின் நிலை தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் இன்னும் வெளியாகவில்லை. விபத்து சம்பவத்திற்கு உள்ளான ஹெலிகொப்டரில் பயணித்தவர்களில் 8 பேர் பெண்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
13 சுற்றுலா பயணிகளுடன், 3 விமானிகளும் அந்த ஹெலிகொப்டரில் பயணித்துள்ளனர். தெற்கு சைபீரியாவின் Altai மலைப்பகுதியில் பெலுகா மலை மிக உயரமான சிகரம் என கூறுகின்றனர். இதன் உயரமானது 4,506 மீற்றர் என்பது குறிப்பிடத்தக்கது.



