( srilanka tamil news-tamillk news ) சிறையில் உள்ள விடுதலைப்புலிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் அதேநேரம் குற்றம் சுமத்தப்பட்டுள்ள படைவீரர்களுக்கும் மன்னிப்பு வழங்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர்மேலும் குறிப்பிடுகையில்,
“விடுதலை புலிபயங்கரவாதிகளுக்கு ஜனாதிபதியால் மன்னிப்பு வழங்கியதை நான் பார்த்தேன். குறிப்பாக, மத்திய வங்கி மீது குண்டுத் தாக்குதலில் 91 பேரைக் கொன்று, 200க்கும் மேற்பட்டவர்களை காயப்படுத்திய விடுதலைப் புலி உறுப்பினருக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளார்.
நானும் சிறையில்
புலிச் சந்தேக நபர்களுடன் நானும் மகசின் சிறைச்சாலையில் இருந்தேன். நான் விளக்கமறியலில் இருந்த நேரம் அது.
15, 20 வருடங்களாக விளக்கமறியலில் உள்ளவர்களை ஜனாதிபதி திட்டமிட்டு மன்னிப்பதாலோ அல்லது விடுதலை செய்வதாலோ அது பிரச்சினை இல்லை.
மறுபுறம், படை வீரர்கள் குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளிகளாக காணப்பட்டனர். ஜனாதிபதி இவர்களுக்கும் மன்னிப்பு வழங்கினால், அது இந்த நேரத்தில் சரியாக இருக்கும் என்றும் நான் நம்புகிறேன்.
படைவீரர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு
ஏனென்றால் இந்த அத்தியாயத்தை மூட வேண்டும். புலி பயங்கரவாதிகளுக்கு மட்டும் மன்னிப்பை மட்டுப்படுத்த முடியாது. படை வீரர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இருந்தால், அதனை ஜனாதிபதி அவர்களையும் மன்னித்து இந்த அத்தியாயத்தை முடிக்க வேண்டும் என்பது எனது நம்பிக்கை” என அவர் மேலும் தெரிவித்தார்.




