கண்டி – கலஹா சுதுவெல்ல பகுதியில் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போன சிறுவன் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.
தெல்தொட்டை பிரிவின் ஆற்றுப்பள்ளத்தாக்கில் அவரின் சடலம் மீட்கப்பட்டது.
குறித்த சிறுவன் நேற்று பாடசாலை சென்று வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில் அந்தப்பகுதியில் உள்ள பாலம் ஒன்றை கடக்க முற்பட்ட நிலையில், நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போனார்.
இதனையடுத்து பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, நேற்றைய தினம் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
எனினும், குறித்த பகுதியில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக, நேற்றைய நாளின் தேடுதல் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.
இந்தநிலையில், இன்று மீண்டும் தேடுதல் பணிகள் இடம்பெற்ற நிலையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.
சடலமாக மீட்கப்பட்டவர் கலஹா பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 5 ஆம் தரத்தில் கல்வி கற்ற மாணவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.



