(vavuniya tamil news-tamil) இந்திய அரசினால் வவுனியா மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசியில் ஒரு தொகை பதுக்கப்பட்டமை தொடர்பான விசாரணை இன்னும் முடிவுக்கு வரவில்லை என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினூடாக தெரியவந்துள்ளது.
அதன்படி, மக்களுக்கென இந்திய அரசினால் வழங்கப்பட்ட அரிசியில் 1,276 கிலோகிராம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு வருட காலமாக விசாரணை
சுமார் ஒரு வருட காலமாக இடம்பெற்று வரும் இந்த பிரச்சினை குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த விசாரணைகளின் விபரத்தினை வவுனியா பிரதேச செயலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட போது,
மாவட்ட செயலகத்தால் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இவ் விசாரணை தொடர்பான விபரங்கள் பிரதேச செயலகத்திற்கு கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட செயலகத்திடம் இருந்து விசாரணை அறிக்கை கிடைக்கப்பெற்றால் குறித்த விடயத்திற்கான நடவடிக்கைகள் தொடர்பில் தகவல் வழங்க முடியும் என வவுனியா பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
நிவாரண அரிசிகள் பதுக்கி வைக்கப்பட்ட நிலையில்
வவுனியா ஆசிகுளம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள மதுராநகர் கிராமத்தின் அரச கட்டிடமொன்றின் அறையினுள் இந்தியாவின் தமிழ்நாடு அரசினால் வழங்கப்பட்ட 1,276 கிலோகிராம் நிவாரண அரிசிகள் பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் அப்பகுதி மக்களால் 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இவ் விடயம் தொடர்பாக வவுனியா பிரதேச செயலாளருக்கு கிராம மக்களால் அறிவிக்கப்பட்ட நிலையில் மாவட்ட செயலக கணக்காய்வு உத்தியோகத்தர்கள், அனர்த்த முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தர்கள் உதவி பிரதேச செயலாளர் தலைமையில் குறித்த பகுதியில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
விசாரணைகள்
இந்நிலையில், குறித்த அரிசியினை மேலதிக பரிசோதனைகளுக்காக பிரதேச செயகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதுடன் இது தொடர்பான விசாரணைகள் மாவட்ட செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு ஒரு வருடமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



