(vavuniya tamil news) வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி தின இரவு நிகழ்வுகளுக்காக கூடியிருந்த பக்தர்கள் மீது பொலிஸார் வன்முறையில் ஈடுபட்டுள்ளதுடன் வழிபாடுகளையும் குழப்பி சமய குருக்களால் சபிக்கப்பட்டுள்ளனர்.
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் வழமை போன்று சிவராத்திரி வழிபாடுகளை மேற்கொள்ள பக்தர்கள் சென்றிருந்தனர்.
நீதிமன்ற அனுமதியுடன் வழிபாடுகளை மேற்கொள்ளச் சென்ற பக்தர்களுக்கு தடைகளை ஏற்படுத்தி அவர்களை செல்லவிடாது தடுத்ததுடன், வாகனங்களை உள்நுழைய விடாது தடுத்து மிகவும் அநாகரீகமான முறையில் நடந்துகொண்டனர்.
பல்வேறு தடைகளுக்கு மத்தியில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வழிகாட்டலுடன் குறித்த பகுதிக்குச் சென்று பக்தர்கள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.
"தொல்லியல் சட்டத்தின்படி பிற்பகல் 6மணிக்கு பின்னர் தொல்லியல் இடத்தில் பூசை வழிபாடுகளில் ஈடுபட முடியாது. ஆறு மணிக்கு பின்னர் நிற்பவர்களைக் கைதுசெய்வோம்" என பொலிஸார் எச்சரிக்கை விடுத்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உதைந்தெறிந்து அட்டகாசம்
சிவராத்திரி நிகழ்வுகள் இரவுமுழுவதும் இடம்பெறவிருந்த நிலையில் வழிபாடுகளுக்கு பக்தர்கள் ஆயத்தமாகியிருந்தனர். இந்த நிலையில் அங்கு சென்ற பொலிசார், பக்தர்கள் மேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் கயேந்திரகுமாரை இழுத்துச்சென்று தாக்கியதுடன், பெண்களின் கழுத்தைப் பிடித்து இழுத்து வீசி சுவாமிக்கான படையல் பொருட்களை சப்பாத்துக்கால்களால் உதைந்தெறிந்து அட்டகாசம் செய்ததனால் அங்கு பெரும் பதட்டநிலை ஏற்பட்டது.
ஆலய நிர்வாகசபைத்தலைவர் உட்பட 8 பேரை கைது செய்ததுடன் வழிபாட்டை சீரழித்து பக்தர்களை கலைத்துள்ளனர். குறித்த பொலிசாரின் அநாகரீக அடக்குமுறைக்கு மக்கள் பாரிய எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



