(vavuniya news) வவுனியா(Vavuniya) நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவின் வீட்டில் திருடப்பட்ட ஒரு கோடி ரூபாய் பெறுமதியான 60 பவுன் நகைகள் அவரது வீட்டு கூரையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நகைகளானது இன்று (25.04.2024) மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதா அவர்களின் கோவில்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பகல் 60 பவுன் நகையும், கடவுச் சீட்டு ஒன்றும் திருடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளரால் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
மேலும், குறித்த விசாரணைகளின் போது அவர்களது வீட்டில் இருந்த சிசி ரீவி கமராக்களும் காணாமல் போயிருந்தமை தெரியவந்துள்ளது.
இதன்போது விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வீட்டின் கூரைப்பகுதியில் கீழ் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 60 பவுன் நகைகளையும் கடவுச் சீட்டையும் மீட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் வீட்டில் உள்ளவர்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்து தங்கியிருந்த அவர்களது உறவினர் ஆகியோர் பொலிஸாரால் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட நகைகள் பொலிஸ் நிலையத்தில் உள்ளதுடன் அதனை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.