மட்டக்களப்பு(Batticaloa)-கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் முறுத்தானை படுகாட்டு வயல் பிரதேசத்தில் பயிர் செய்கை நடவடிக்கைக்காக அரச காணியை அபகரிப்பு செய்யும் முகமாக சட்ட விரோத காடழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் நேற்று மாலை (11) கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காடுகளில் நெருப்பு
முறுத்தானை படுகாட்டு வயல் பிரதேசத்தில் கடந்த வாரம் முதல் கனரக இயந்திரங்களின் மூலம் பாரிய மரங்கள் அழிக்கப்பட்டு காடுகளில் நெருப்பு வைக்கும் செயற்பாடு இடம்பெற்று வருவதாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு பிரதேச மக்களினால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாவட்ட செயலகம் மற்றும் கிரான் பிரதேச செயலகமும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையினால் இவ் சட்ட விரோத காணி சுவீகரிப்பு நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை காவல்நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டினை அடுத்து காடழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் இருவரையும் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கையினை காவல்துறையினர் இன்று மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது, பயன்படுத்தப்பட்ட 2 இயந்திரங்களில் ஒன்றை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றிருந்தனர்.மற்றயது இயந்திர கோளாறு காரணமாக எடுத்து வரப்படவில்லையென தெரிவித்தனர்.
பிரதேச பொதுமக்கள் கவலை
கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் எல்லைக் கிராமங்களில் உள்ள அரச மற்றும் வன இலாகாவிற்கு சொந்தமான காணிகள் பல தனவந்தனர்களினால் காடழிப்பு செய்யப்பட்டு அபகரிக்கப்பட்டு வருவதாக பிரதேச பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
(Batticaloa Tamil News......)