நிறுத்தப்பட்ட இடமாற்றத்தை நடைமுறைப்படுத்தக் கோரி திருகோணமலை மொரவெவ பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று (17) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலை, மொரவெவ பிரதேச செயலகத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற இருந்த நேரத்தில் மாவட்ட செயலகத்தால் நிறுத்தப்பட்ட இடமாற்றத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பிரதேச செயலகத்தின் பிரதான நுழைவாயிலை மூடி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல வருட காலமாக மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவில் இடமாற்றம் கிடைக்காமல் பலர் இருக்கின்றபோது, சிலர் நகர் பகுதியில் வேலை செய்ய வேண்டும் என்பதற்காக இவ் இடமாற்றத்தினை நிறுத்தியுள்ளதாகவும், முறையான இடமாற்றத்தை நடைமுறைப்படுத்தக்கோரி “NPP அரசே இடமாற்றத்தில் இடம்பெறும் பாராபட்சங்களை நிறுத்து”, “நியாயமான வருடார்ந்த இடமாற்றத்தை நடைமுறைப்படுத்து” “இடமாற்றத்தில் தொழிற்சங்கத்தின் ஒருதலைபட்ச தலையீட்டை நிறுத்து” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.