கொட்டகலை கேம்பிரிட்ஜ் பாடசாலையில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த மாணவனொருவர், பந்தை பிடியெடுக்க முற்பட்டபோது வழுக்கி விழுந்து பாடசாலை கட்டிடத்தில் மோதியதில் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
மேற்படி கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி பயிலும் தலவாக்கலை, கிரேட்வெஸ்டன் தோட்டத்தைச் சேர்ந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் நேற்றையதினம்(04) பாடசாலை இடைவேளை நேரத்தில் சக மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்துள்ளார்.
இதன்போது, பந்தை பிடியெடுக்க எடுப்பதற்காக ஓடிய குறித்த மாணவன் கால் தடுக்கி விழுந்துள்ளார்.
இதனால், அவரின் தலைப்பகுதி பாடசாலை கட்டடமொன்றில் சுவரில் மோதியுள்ளது. இதனால் அவரின் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து மாணவன், டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கிருந்து கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில்குறித்த மாணவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் திம்புள்ள- பத்தன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.