மகாராஷ்டிராவில் திடீரென இடிந்த பாலம் - சுற்றுலாப் பயணிகள் அறுவர் பலி.! - இந்தியாவில் தொடரும் உயிரிழப்பு

Tamil lk News

  இந்தியா - மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே இந்திராயணி ஆற்றில் கட்டப்பட்டிருந்த பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. 




மகாராஷ்டிரா மாநிலத்தில்  கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வந்த நிலையில், திடீரென இன்று  பாலம் இடிந்து விழுந்தது. இதில் ஆறு சுற்றுலாப் பயணிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.  

Tamil lk News


புனே அருகே குந்த்மாலா பகுதியில் இன்று மாலை இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.  பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், பரவலாகவே மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அதேநேரம் சில இடங்களில் கனமழை  பொழிவதால், மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். 




இந்த குந்த்மாலா என்பது பிரபலமான சுற்றுலாத் தலமாகும். குறிப்பாக மழை காலங்களில் இங்கு அதிகளவிலான மக்கள் வருகை தருவது வழக்கம். பாலம் இடிந்து விழுந்தபோது, சுமார் 15 முதல் 20 சுற்றுலாப் பயணிகள் பாலத்தின் மீது இருந்ததாகவும், அவர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 




இருப்பினும், எத்தனை சுற்றுலாப் பயணிகள் இருந்தனர் என்பது குறித்து உறுதியான தகவல் எதுவும் இல்லை. இது குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை எட்டு பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், சிலர் பாலத்தின் அடியில் சிக்கியிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.  அவர்களை மீட்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. 


 


ஏற்கனவே புனே மற்றும் பிம்பிரி சின்ச்வாட் பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், புனேவில் மாவல் பகுதியில் இந்த பாலம் இடிந்து விழுந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக இப்பகுதியில் கனமழை பெய்து வந்தது குறிப்பிடத்தக்கது. 




சுமார் 4-5 வருடங்களுக்கு முன்பு தான் இந்த பாலம் புதுப்பிக்கப்பட்டது. இருப்பினும் அப்போதே இந்த பாலத்தின் கட்டமைப்பில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்திருந்தனர். ஆனால் பல சுற்றுலாப் பயணிகள் ஆபத்தை உணராமல் இருந்ததாகவும் அப்பகுதி மக்கள்  தெரிவித்துள்ளனர்.  இந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




இதற்கிடையே ஏர் இந்தியா விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்தது இந்தியாவை மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகத்தையும் நிலைகுலைய வைத்துள்ள நிலையில் மீண்டும் ஓர் இழப்புச் சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்