இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்கள் இன்று காலை முதல் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் இணைந்த நேர அட்டவணையில் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் சேவையில் ஈடுபட வேண்டும் என்ற திட்டம் முன்வைக்கப்பட்டது.
குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இன்றைய தினம் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக வவுனியா மாவட்டத்திலும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை.
இன்று காலையிலிருந்து சேவையில் ஈடுபடாமையினால் பொதுமக்கள் பலரும் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
தனியார் பேருந்துகளில் முண்டியடித்து மக்கள் செல்ல முற்பட்ட போதிலும் போதுமான பேருந்து வசதிகள் காணப்படாமையினால் பலர் தமது பயணத்தை இடைநிறுத்த வேண்டிய நிலைமையில் காணப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.