இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துடன் லொறி ஒன்று மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
நாரம்மல - குருநாகல் வீதியின் நாரம்மல நகருக்கு அருகில் இன்று (05) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குருநாகலில் இருந்து நாரம்மல நோக்கி பயணித்த லொறி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் வலது பக்கத்திற்கு சென்று கட்டுநாயக்கவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் லொறியின் சாரதியுடன் இரு ஆண்கள், 2 பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் காயமடைந்த நிலையில் நாரம்மல மற்றும் குருநாகல் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது லொறியின் சாரதி, ஆண் ஒருவர் மற்றும் பெண் ஒருவருமாக மூவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர்கள் பொலன்னறுவையைச் சேர்ந்த, 41, 80 மற்றும் 82 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
குறித்த லொறியில் பயணித்த 40 வயதுடைய பெண், 16 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுமிகள் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தையடுத்து பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் நாரம்மல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.