கடந்த ஞாயிற்றுக்கிழமை தெற்கு இத்தாலி கடற்கரையில் மூழ்கிய படகில் குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் உயிரிழந்திருக்கலாம் என இத்தாலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 200 வெளிநாட்டு குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகு தெற்கு இத்தாலியின் குரோடோன் பகுதியில் தரையிறங்கவிருந்த போது கடலில் மூழ்கியதில் 63 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களில் 12 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியில் இருந்து புறப்பட்ட இந்தப் படகில் ஆப்கானிஸ்தான், சோமாலியா, பாகிஸ்தான், சிரியா, ஈராக், ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர் குழுவொன்று பயணித்துள்ளதாகவும், 16 பாகிஸ்தான் பிரஜைகள் உட்பட 80 பேரை மீட்க கடலோரக் காவல்படை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த விபத்துக்குப் பிறகு, இதுபோன்ற சட்டவிரோத குடியேற்ற படகுகள் ரகசியமாக ஐரோப்பிய நாடுகளுக்கு வருவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐரோப்பிய நிறுவனங்களுக்கு இத்தாலிய பிரதமர் ஜியோஜியா மெலானி கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் குடியேற்றவாசிகளை இந்தப் படகில் ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் நீரில் மூழ்கிய படகில் இருந்த ஒருவரை கைது செய்ய இத்தாலிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.