அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 41 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்


 

( srilanka tamillk tamil news ) சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முயன்ற போது, ​​அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 41 இலங்கையர்கள், நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு இன்று (மே 9) காலை விசேட விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான ASY-013 விமானத்தில் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் இருந்து பயணத்தை ஆரம்பித்த இவர்கள் இன்று காலை 9:40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.


இவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணம் மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும், இவர்கள் பல நாள் மீன்பிடி படகுகளில் அவுஸ்திரேலியா சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.


இலங்கையில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் மூன்று சிரேஷ்ட அதிகாரிகளும் குழுவை வரவேற்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.


நாடு கடத்தப்பட்ட இலங்கையர்களுடன் இலங்கை பாதுகாப்பு படையினர் குழுவும் வந்தது.


கட்டுநாயக்க விமான நிலையத்தில், அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளினால் குறித்த குழுவினர் குடிவரவு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


அதன் பின்னர், தேசிய புலனாய்வு தகவல் பிரிவினரால் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், இந்தக் குழு கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.


அங்கு இந்த குழுவினரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்