(vavuniya news-tamillk ) வவுனியாவில் வைத்து இலங்கை கடற்படை சிப்பாய் ஒருவரை வவுனியா பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சி முழங்காவில் இலங்கை கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை சிப்பாய் ஒருவர் வவுனியாவில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைபப்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போதே கடற்படை சிப்பாய் கைது செய்யபப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு செல்லும் பேருந்து ஒன்றில் கேரள கஞ்சா கடத்தப்படுவதாக வவுனியா மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்ததற்கு அமைய குறிப்பிட்ட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து குறித்த பேருந்து வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் வைத்து சோதனைக்குட்படுத்தப்பட்டது. இந்த சோதனை நடவடிக்கையின்போது 5 வகையாக பொதி செய்யப்பட்ட நிலையில் காணப்பட்ட 10 கிலோ 74 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டதுடன், அதனை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த பேருந்தில் பயணத்தை மேற்கொண்ட கடற்படை சிப்பாயை பொலிஸார் கைது செய்தனர்.
வவுனியா மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா,மற்றும் சந்தேகநபரான கடற்படை சிப்பாயை வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அடுத்து வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு வவுனியா பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்
மேலும் இது தொடர்பான செய்திகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்



