வவுனியாவில்(Vavuniya) உள்ள பாடசாலை ஒன்றில் இந்து வணக்க சிலை வைப்பதற்கு அனுமதிக்க முடியாது என பாடசாலை அபிவிருத்தி சங்கம் தெரிவித்த நிலையில் அங்கு பெரும் குழப்ப நிலை நீடித்து வருகின்றது.
வவுனியா, கோமரசன்குளம் மகாவித்தியாலயத்தில் அதிகமாக இந்து மாணவர்கள் கல்வி கற்று வருவதுடன், குறித்த பாடசாலை காணப்படும் அயலில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர்.
குறித்த பாடசாலையில் இந்து மற்றும் கிறிஸ்தவம் என்பவற்றுக்கான காலை பிரார்த்தனை வழிபாட்டிடங்கள் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக காணப்பட்டு வரும் நிலையில் அதில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த இந்து வழிபாட்டு படங்கள் பழுதடைந்து காணப்படுகின்றன.
இதனையடுத்து, குறித்த பாடசாலையில் மத சிலையை வைக்க கூடாது எனவும் இது கிறிஸ்தவம், இந்து மதங்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் எனக் கூறி அப் பகுதி மதபோதகர் உட்பட சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மத போதகரால் கடிதம் ஒன்றும் பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பாடசாலை அபிவிருத்திச் சங்கம் இந்து சிலை அமைக்க அனுமதி வழங்க மறுத்துள்ளது.
இவ் விடயம் தொடர்பில் வவுனியா தெற்கு வலயத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பழைய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பாடசாலையில் இரண்டு மத சிலைகளும் வைப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் இந்து மாணவர்கள் அதிகமாக கற்கும் பாடசாலையில் வழிபாட்டு உரிமை இல்லையா எனவும் பழைய மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது தொடர்பாக மதபோதகர் சதாஸ்கர் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது, இவ் விடயம் தொடர்பில் நானும் கேள்விப்பட்டேன் எனத் தெரிவித்தார்.
கடிதம் கொடுத்தமை தொடர்பில் கேட்ட போது, அது பாடசாலைக்கு தானே கொடுத்தது உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை எனக் கூறி தொடர்பை துண்டித்துள்ளார்.
Vavuniya News