தனது தாயை கிணற்றில் தள்ளி கொலை செய்த இளைஞரொருவர் அநுராதபுரம் - கல்னேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு மாதத்திற்கு முன்பு, கல்னேவ - ஹெலபதுகமவில் விழுந்து உயிரிழந்ததாக தெரிவித்து இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.
46 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்டு வந்த தொடர் விசாரணைகளின் அடிப்படையில், உயிரிழந்த பெண்ணின் இளைய மகன் சந்தேகத்தின் பேரில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பான நீதவான் விசாரணைகளின் பின்னர், தடயவியல் மருத்துவ அறிக்கையில் இந்த மரணம் நீரில் மூழ்கியதால் சம்பவித்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், இறந்தவரின் தலை திசு சேதமடைந்ததால், இந்த மரணம் ஒரு கொலையா என்பதை தீர்மானிக்க பல பிரிவுகள் மூலம் விசாரணைகள் தொடங்கப்பட்டிருந்தன. குறித்த விசாரணைகளின் அடிப்படையிலேயே உயிரிழந்த பெண்ணின் இளைய மகன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண் சடலமாக மீட்கப்பட்ட நேரத்தில், அந்தப் பெண்ணின் இளைய மகன், தனது தாய் அவிசாவளையைச் சேர்ந்த ஒருவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்து அவருடன் வாழ்ந்து வந்ததாகவும், சில மாதங்களுக்கு முன்னர் குறித்த நபர் தங்களது வீட்டை விட்டுச் சென்றதால் மனமுடைந்த தாயார் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.