ஹெலிகொப்டர் ஒன்று காட்டுப் பகுதிக்குள் விழுந்து நொருங்கி விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த 8 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து மேற்கு ஆபிரிக்க நாடான கானாவில் நேற்று புதன்கிழமை (6) காலை இடம்பெற்றுள்ளது.
கானா நாட்டின் தலைநகர் அக்ராவில் இருந்து, நேற்று (6) காலை 9.12 மணியளவில் (உள்ளூர் நேரப்படி), அந்நாட்டின் அஷாந்தி மாகாணத்தில் உள்ள ஒபுவாசி நகரத்துக்கு, இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று புறப்பட்டுள்ளது.
இந்த ஹெலிகொப்டரில் அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறைகளின் அமைச்சர்கள் 2 பேர் உள்பட 8 பேர் பயணித்ததாகக் கூறப்படுகின்றது.
குறித்த ஹெலிகொப்டர் கானா நாட்டின் தலைநகர் அக்ராவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில், அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் அங்குள்ள வனப்பகுதியில் ஹெலிகொப்டர் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில், கானாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் எட்வார்டு ஒமானே பொவாமா, சுற்றுச்சூழல் அமைச்சர் அல்ஹாஜி முர்தாலா முஹம்மது உள்பட அந்த ஹெலிகொப்டரில் பயணித்த 8 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசின் செய்தித்தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.