வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடல் பிராந்தியத்திற்கு மேலாக தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று எதிர்வரும் சனிக்கிழமை உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இந்த தாழ் அமுக்கம் மேலும் தீவிரமடைவதுடன் இலங்கையின் வட கரையை அண்மித்ததாக நகர்ந்து செல்லும் என சிரேஸ்ட வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.
இதன்படி, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.



