சீரற்ற காலநிலையால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு விரைவாக நட்டஈடு வழங்கப்படும் என கிராமிய, பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்றையதினம்(20) விவசாயிகளுக்கான உழவு இயந்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்திற்கு 6 உழவு இயந்திரங்களும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 6 உழவு இயந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளது.
இதில் 50 வீதம் எமது அமைச்சின் ஊடாக மானியமாகவும், மிகுதி 50 வீதம் பயனாளிகளும் வழங்குகிறார்கள்.
10 இலட்சம் பெறுமதியான ஒவ்வொரு உழவு இயந்திரங்களுக்கும் 5 இலட்சத்தை எமது அமைச்சு வழங்கியுள்ளது.
முன்னேற்ற நடவடிக்கை
மழை, வெயில் காரணமாக பாதிப்படைந்த மக்களுக்கு தீர்வை பெற்றுக் கொள்ளும் முகமாகவும் பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். மாற்று பயிர்செய்கை, மரக்கறி செய்கை ஊக்குவிப்பு வேலைத் திட்டங்களை முன்னேற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம்.
எமது மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய எமது அமைச்சரும், நாங்களும் பல வேலைகளை முன்னெடுத்துள்ளோம். அதில் ஒரு கட்டமாக உழவு இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
மழை, வெயில் காரணமாக விவசாயிகள் பாதிப்படைந்துள்ளார்கள். அவர்கள் மீண்டும் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு நஸ்ட ஈடு வழங்க துரித நடவடிக்கை எடுத்துள்ளோம்.
தற்போது விபரங்கள் திரட்டப்பட்டுள்ளது. விரைவாக நட்டஈடு வழங்கப்படும். பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது.
விவசாயிகளுக்கான ஊக்குவிப்புக்கள் உள்ளது. அதனை நாம் ஆதரிக்க வேண்டும். அதை கொண்டு வந்த ஜனாதிபதிக்கு எமது ஆதரவு உண்டு எனவும் தெரிவித்தார்.
vavuniya news
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |