(Jaffna tamil news) யாழ். கோண்டாவில் பகுதியில் சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்தை வழிமறித்த சிலர், குறித்த பேருந்தின் நடத்துனரை நையப்புடைத்து, கத்தியால் குத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ் நகரில் தனியார் பேருந்தில் ஏறிய இரண்டு மாணவிகளுடன், நடத்துனர் முறையற்ற விதத்தில் நடந்ததால் கோபமடைந்த சகோதரர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக பொலிஸாரிடம் விசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழில் இருந்து வசாவிளானுக்கு பயணித்த தனியார் பேருந்து ஒன்றை நேற்று (20) கோண்டாவில் பகுதியில் இளைஞர்கள் சிலர் வழிமறித்து, நடத்துனரை கீழே இறக்கி நையப்புடைத்த நிலையில் அவரது கையையும் கத்தியால் குத்தியுள்ளனர்.
இச்சம்பவத்தில் இது தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்த போது, யாழ் நகரில் இருந்து பேருந்து பயணத்தை ஆரம்பித்த போது, இரண்டு பாடசாலை மாணவிகளுடன் நடத்துனர் முறையற்ற விதமாக நடந்து கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சுண்டுக்குளியல் உள்ள பிரபல பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கல்வி பயிலும் இரண்டு மாணவிகள், பாடசாலை முடிந்து வீடு திரும்புவதற்காக யாழ் நகரில் தனியார் பேருந்து ஒன்றில் ஏறியுள்ளனர்.
அருகில் இறங்குபவர்கள் ஆசனங்களில் அமராமல், எழுந்து நிற்கும்படி நடத்துனர் கூறி, மாணவிகளை கீழே இறங்கி நின்றுவிட்டு, பேருந்து புறப்படும் போது ஏறுமாறு கடும் தொனியில் கூறியுள்ளார்.
இதனால் மாணவிகளுக்கும் நடத்துனருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, மாணவிகள் பேருந்தில் ஏறியிருந்த பின் ஓரிருமுறை கீழே இறங்கி சென்று வந்துள்ளனர்.