பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு ; கொழும்பு, யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

 

Tamil LK News

 சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என 'சிவப்பு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இந்த சிவப்பு எச்சரிக்கை இன்று (27) பிற்பகல் 12:30 மணிமுதல் புதன்கிழமை (28) பிற்பகல் 12:30 மணி வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



 தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் அ ம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கரையோரப் பகுதிகளில் மணிக்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும், சில நேரங்களில் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



 மறு அறிவித்தல் வரை கடற்படை மற்றும் மீன்பிடி சமூகங்கள் கடல் பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கரையோரக் கடல் பகுதிகளிலும் அலைகளின் உயரம் (சுமார் 2.5 மீ - 3.0 மீ) அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



 இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகளை கடற்படை மற்றும் மீன்பிடி சமூகங்கள் கவனத்தில் கொள்ளுமாறு  அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்