அநுராதபுரம் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு! 40ற்கும் மேற்பட்டோர் படுகாயம்!!

  

Tamil lk News

அநுராதபுரம், தலாவை, ஜயகங்க சந்திப் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் ஒருவர்   உயிரிழந்துள்ளதுடன் 40ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.


இன்று (10) பிற்பகல் தலாவையிலிருந்து நொச்சியாகம நோக்கிச் சென்ற தனியார் பேருந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.


அநுராதபுரம், தலாவை, ஜயகங்க சந்திப் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் காயமடைந்தவர்களில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களும் அடங்குவதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.



விபத்து நடந்த நேரத்தில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர்கள் உட்பட சுமார் 50 பேர் பேருந்தில் பயணித்திருந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.


பேருந்து பயணித்த மிகக் குறுகிய சாலையில் மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு வழிவிட முயன்றதால் பேருந்து கவிழ்ந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.



விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக தலாவ வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தலாவப் பொலிஸார் தெரிவித்தனர்.


மேலும் காயமடைந்தவர்களின் சிலர் தற்போது தம்புத்தேகம மற்றும் தலாவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


முன்னதாக, விபத்தைத் தொடர்ந்து ஆறு பேர் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியது. 


ஆனால் இந்த சம்பவத்தில் ஒருவர் மட்டுமே உயிரிழந்ததாக பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர். 


விபத்து குறித்து தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்