Srilanka News Tamil
விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனை பிரதமர் ஹரினி அமரசூரிய இன்று(15) வைத்தியசாலையில் சந்தித்து நலன் விசாரித்துள்ளார்.
யாழ்ப்பாணம் (Jaffna) போதனா வைத்தியசாலைக்கு சென்ற பிரதமர் ஹரினி அமரசூரிய இளங்குமரனின் உடல் நிலைமை தொடர்பில் வைத்தியர்களிடம் கேட்டறிந்துள்ளார்.
இதன்போது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீபவானந்தராஜா, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்துள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் பயணித்த கார் யாழ்ப்பாணம் தனங்கிளப்பு பகுதியில் விபத்துக்குள்ளானது.
கிளிநொச்சியிலிருந்து பயணித்துக் கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனின் வாகனமானது சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தனங்கிளப்பு பகுதியில் பயணித்த சிறிய லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
தலையில் பலத்த காயத்துக்குள்ளான நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை,பிரதமர் ஹரினி அமரசூரிய இன்று யாழ்பாணத்திற்கு விஜயம் செய்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்துக்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.