2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று (நவம்பர் 8) இலங்கை நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இந்த விவாதம் டிசம்பர் 5 வரை தொடரும் என்று பாராளுமன்ற பொது செயலாளர் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார்.
மேலும், வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 17 நாட்களுக்கு இடம்பெறும்.
பின்னர், இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறும்.
இந்த காலப்பகுதிகளில், அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து, ஒவ்வொரு நாளும் விவாதம் நடைபெறும்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (07) மாலை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இது தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் ஆட்சிபீடமேறிய பின்னர் இரண்டாவதாக முன்வைக்கும் வரவு செலவு திட்டமாகும்.
ஜனாதிபதி நேற்று 4 மணித்தியாலங்களுக்கு மேல் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.



