இ.போ. சபைக்கு சொந்தமான பேருந்தின் பின் சக்கரங்களில் ஆணிகள் கழன்று தளர்வான நிலையில் நடக்கவிருந்த பெரும் விபத்தை பேருந்து சாரதி தவிர்த்து பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
இச்சம்பவத்தின் போது, குறித்த பேருந்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பலாங்கொடை டிப்போவிற்கு சொந்தமான பேருந்தின் சாரதியாக அஜித் குமார கடமையாற்றியதாகவும் அவரின் திறமையினால் விபத்து தடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தது
பலாங்கொடையில் இருந்து கண்டி நோக்கி இன்றையதினம் (30-06-2024) காலை சுமார் 6.50 மணியளவில் குறித்த பேருந்து புறப்பட்டது.
இதன்போது சக்கரங்கள் பழுதடைந்ததால், சாரதியின் கட்டுப்பாட்டை பேருந்து இழந்தது. இதனால் உடனடியாக சாரதி பேருந்தை நிறுத்தினார்.
பின்னர் அவர் சக்கரங்களை சரிபார்த்தபோது, பின் சக்கரங்களின் ஆணிகள் கழன்று தளர்வாக இருந்ததை அவதானித்துள்ளார்.
சாரதியின் உடனடி முடிவால் குறித்த பேருந்தில் பயணித்த 100 ற்கும் மேற்பட்ட பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது.