Srilanka News Tamil
30 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கையடக்க தொலைபேசிகள் மற்றும் டெப்லெட் கணினிகளை சட்டவிரோதமாக கொண்டு வர முயன்ற வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 13, கொட்டாஞ்சேனையை சேர்ந்த குறித்த சந்தேக நபர் அடிக்கடி பயணங்களை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், கடந்த பெப்ரவரி 1ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு கட்டார் ஏர்வேஸ் விமானம் QR-654 மூலம் இலங்கைக்கு வந்துள்ளார்.
இருப்பினும், அவரது பொருட்கள் அதே விமானத்தில் கொண்டு வரப்படவில்லை. அதன் பின்னர், அவரது பொருட்கள் தனி விமானத்தில் சுங்க திணைக்களத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் அவர் நேற்று குறித்த பொருட்களை பெற்று கொள்வதற்காக சென்றுள்ளார்.
இதன்போது அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், சுங்க அதிகாரிகள் அவரது பொருட்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 180 உயர் ரக கையடக்க தொலைபேசிகள் மற்றும் ஐந்து டெப்லெட் கணினிகளைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளைத் முன்னெடுத்து வருவதால், குறித்த வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.