தமிழ் அரசியல் கைதிகளான இளங்கோ கந்தையா உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு இன்று (13) காலி மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கடல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்து, 22 பேர் காயம் காயமடைந்தமையால் பிரதிவாதிகளான இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பயங்கரவாத சட்டத்தின் கீழ் 23 வது குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த 4 பிரதிவாதிகளுக்கு எதிராக 2010 ஆம் ஆண்டு காலி மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு வழக்கின் முதலாவது பிரதிவாரியான கந்தையா இளங்கோ கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
முதலாவது பிரதிவாதியால் வழங்கப்பட்டதாககக் குற்றம் ஒப்புதல் வாக்குமூலம், 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆறாம் திகதி இடம்பெற்ற உண்மை விளம்பல் விசாரணையின் போது நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டு ஐந்து வருடங்கள் அண்மிக்கிறது என பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் விமானப்படையால் 2009 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வீச்சு தாக்குதலில் முதலாவது பிரதிவாதி தனது வலது காலை இழந்துள்ளதுடன், கடந்த 15 வருடங்களாகியும் விசாரணை முற்றும் முழுதாக நிறைவடையாது தொடர்ந்து சிறையில் வாடுவதனையும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து காலி மேல் நீதிமன்ற நீதிபதி முதலாம் எதிரியான கந்தையா இளங்கோவுக்கும் இன்றைய தினம் பிணை வழங்கியுள்ளார்.
மேலும் இந்த விடயங்களை ஆராய்ந்த காளி மேல் நீதிமன்ற நீதிபதி, 04 பிரதிவாதிகளுக்கும் பிணை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணையில் பிரதிவாதி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா ஆஜராகியதுடன். சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மொஹமட் பபாரி ஆஜராககிருந்தார்.



